Tuesday, November 10, 2009

உலகின் கனவுக் கன்னி




உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர்.

மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார்.

பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார். மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் "நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.

இந்த நிலையில் 5/8/1962_ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

மர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது. அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர்.

அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார்.

டாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது.

அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது.

இதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது.

தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஆங்கில நடிகை சோபியா லாரன் இந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு ஆங்கில நடிகையான ஜீனா லோலாபிரி கிடா கூறும்போது, "இது பெரிய அதிர்ச்சியான செய்தி. நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர் (மர்லின் மன்றோ) மிகவும் நல்லவர்" என்று சொன்னார்.

அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது.

மன்றோவைப்பற்றி வர்ணிப்பது என்றால் தங்க நிற தலைமுடி, எப்போதும் புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்பார்கள்.

மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்ததை யாரும் மறந்துவிடலாகாது.

மர்லின் மன்றோ 1926 ம் ஆண்டு ஜுன் மாதம் 1 ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகர ஆஸ்பத்திரியில் பிறந்தார். மர்லின் மன்றோ தந்தை அவள் பிறக்கும் முன்பே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் பிறந்தபோது அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லை. எனவே அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார்.

வீட்டு வேலைகள் செய்யும் பருவம் வந்ததும் அனாதை விடுதியை விட்டு வெளியேறினார். பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற சிறிய வேலைகளை பார்த்து வந்தார். ஒவ்வொரு வீட்டிலும் இருந்து பந்துபோல் அங்கும் இங்கும் அடித்து விரட்டப்பட்டார். கல்யாணம் ஆன பிறகாவது வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுமா என்ற ஆசையில் 16_வது வயதில் ஜேம்ஸ் என்ற வாலிபரை மணந்தார்.

ஆனால் அவரும் ஒழுங்கானபடி வேலை செய்து பிழைக்காததால் தகராறு ஏற்பட்டது. 1 வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பின்பு விமான கம்பெனியில் `பாரசூட்' ரிப்பேர் பார்க்கும் வேலை செய்தார். அதன் பின் படம் வரைவதற்கு மாதிரி (மாடல்) பெண்ணாக நிற்க முயற்சித்தார். ஆனால் அதற்குகூட லாயக்கு இல்லை என்று அவரை எல்லோரும் விரட்டினார்கள்.

எனவே கையில் பணம் இல்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தார். விளம்பரங்களுக்கு நீச்சல் உடையில் தோன்றுவது மூலம் காலம் தள்ளினார். அதன் பிறகு நடிப்பு ஆசையால் ஆலிவுட் நகரில் உள்ள சினிமா பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார்.

வாடகை பணம் கொடுக்காததால் தங்கி இருந்த வீட்டை விட்டு துரத்தினார்கள். இருக்க இடமின்றி நடு ரோட்டில் நிற்கவேண்டியது ஆயிற்று. எனவே ஒரு காலண்டருக்காக நிர்வாணமாக "போஸ்" கொடுத்தார். இதில் 250 ரூபாய் வருமானம் வந்தது. அதை வைத்துக்கொண்டு மீண்டும் சினிமா உலகில் புக முயற்சி செய்தார்.

பத்திரிகையில் வந்த மன்றோவின் படத்தைப் பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்ய அழைத்தார்கள் 2 படக்கம்பெனிக்காரர்கள். ஆனால் முதல் படத்தில் பேசக் கிடைத்த வசனம் ஒரு ஒரே வார்த்தை. அதுவும் படம் வெளிவரும்போது வெட்டப்பட்டுவிட்டது.

ஆனால் படங்களில் ஒரு நிமிடம் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மர்லின். படம் வரையக்கூட லாயக்கு இல்லை என்று வர்ணிக்கப்பட்ட மர்லின் மன்றோ ரசிகர்களால் சினிமா உலக தேவதையாக வர்ணிக்கப்பட்டார்.

மர்லின் மன்றோவின் கவர்ச்சியான உடல் அழகில், நடை அழகில் ரசிகர்கள் மயங்கினார்கள். பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பெரிய படக்கம்பெனி வருடத்திற்கு 55 லட்சம் ரூபாய் வீதம் 7 வருடத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தது.

மர்லின் மன்றோவின் சொந்தப் பெயர் நார்மாஜின் டென்சன் என்பது. 3 முறை திருமணம் செய்தார். மூவரையும் விவாகரத்து செய்துவிட்டார். முதல் கணவர் ஜேம்ஸ், போலீஸ்காரர். 2_வது கணவர் கால்பந்து வீரர். பெயர் ஜேர்டிமாக்கியா. 3_வது கணவர் சினிமா படத்தயாரிப்பாளர் ஆர்தர்மில்லர். மர்லின் மன்றோவுக்கு பிடித்தமான நடிகர் மார்லன் பிராண்டோ.

3_வது கணவரான மில்லருடன் வாழ்க்கை நடத்தும் போது மர்லின் மன்றோவுக்கு 2 தடவை கருச்சிதைவு ஏற்பட்டது. குழந்தை பிறக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினார். ஆனால் கடைசிவரை அவருக்கு குழந்தை இல்லை. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என்று, இருவருடைய மறைவுக்குப்பிறகு பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.

கென்னடியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மர்லின் மன்றோ தவறாமல் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறுவது வழக்கம் என்றும், இவர்களுடைய காதல் விவகாரம் கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்குத் தெரிந்து அவர் கென்னடியுடன் ஆத்திரத்துடன் சண்டை போட்டார் என்றும் பத்திரிகைகள் எழுதின. எப்படி இருப்பினும், மர்லின் மன்றோவுக்கு இணையான உலகப்புகழ் பெற்ற நடிகை அவருக்கு முன்பும் இல்லை; பின்பும் இல்லை.

No comments: