Saturday, September 19, 2009

9-வது உலகத் தமிழ் மாநாடு

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிய மொழி இல்லையென்று சின்ன வயதிலிருந்து எல்லோரும் சொல்கிறோம். ஆனால் இந்த தமிழ் மொழிக்கு நாம் என்ன செய்கிறோமென்று கொஞ்சமாவது?


இல்லையே?

ஆனால் தமிழ்மொழியைக் காதலிக்கும், உயிருக்கு உயிராய் மதிக்கும் பலர் தமிழுக்குத் தொண்டாற்றப் பல வழிகளைத் தேடுகின்றனர். உலகில் இருக்கும் தமிழறிஞர்கள் பலரையும் ஒரே இடத்தில் கூட்டி உலகத் தமிழ் மாநாடு நடத்தும் திட்டமும் இதில் ஒன்றுதான்.

உலகத் தமிழ் மாநாடு பலமுறை உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

முதலாவது உலகத் தமிழ் மாநாடு 1966, ஏப்ரலில் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டை தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஒருங்கிணைத்தார். இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டுத் தலைநகரான சென்னையில் 1968 ம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் முதல் நாள் சென்னை கடற்கரையில் தமிழ் அறிஞர்களான திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி. யு. போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ. உ. சி, வீரமாமுனிவர் ஆகிய 9 பேரின் சிலைகள் திறக்கப்பட்டன. இவர்களோடு தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரமான கண்ணகியின் சிலையும் திறக்கப்பட்டது.

1970 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்தினார்.

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு சனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையை ஆரம்பித்து வைத்திருந்தவரான அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றத்தின் தோற்றுநர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. யாழ் நகரம் சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் விழாக் கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன. 1974 ஆம் ஆண்டில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலே நடைபெறுவதற்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர் பேராசிரியர் வித்தியானந்தன் ஆவார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ல் மதுரையில் 5-வது மாநாடும், பின்னர் மலேசியாவில் 6-வது மாநாடும், மோரிஷஸில் 7-வது மாநாடும், 1995-ல் தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன.

13 ஆண்டுகளைக் கடந்த பிறகும் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவதற்கான அறிகுறிகள் இப்போதுதான் தென்படத் தொடங்குகின்றது.
தற்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களினால் அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆண்டுகளின் பின் 9 வது உலகத் தமிழ் மாநாடு தமிழகம் கோவையில் அடுத்த ஆண்டு (2010) சனவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும்பட்சத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி, வரலாறு, அகழ்வாய்வுகள், கலைகள், தொன்மை, மொழியியல் பற்றியும் பல ஆராய்ச்சி உண்மைகள் வெளி வரும்.
மேலும், ௧௩ ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், ஆய்வேடுகள் மாநாட்டில் வாசிக்கப்படும். அப்போது தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

நமது பெருமையும், சிறப்பும் பழைமையோடு நின்றுவிடாமல் மாறிவருகின்ற வரும் உலகில் தமிழர்களாகிய நாமும் புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும்.

உலகளவில் தமிழ் ஆய்வில் ஆர்வத்தை உருவாக்குவதோடு கடல் கடந்து பல நாடுகளிலும் வாழுகின்ற நம் தமிழ் உறவுகளிடையே ஒற்றுமையுணர்வை வளர்க்கப் பாடுபட முயலவாவது வேண்டும்.
1995-ம் ஆண்டு தமிழகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் முயற்சியால் 8-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
தமிழ் மீது அளவற்ற பற்றுடன், தமிழுக்கு செம்மொழித் தகுதியை பெற்றுத் தந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சியே.

வாழ்க தமிழ் வளர்க அதை வாழவைப்போர் சேவை....

Thursday, September 3, 2009

சாதனைச் சந்திராயன் 1...

சந்திரனை ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து நிலவுக்கு முதன்முதலாக இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய 'சந்திராயன் 1 ' விண்கலம் திடீரென செயலிழந்தது விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாது பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இரண்டுவருடம் செயற்படும் என எதிர்பார்த்த இந்த விண்கலம் பத்து மாதத்திலேயே செயலிழந்தது அதிர்ச்சியை தருவது நியாயம்தானே..

இருந்தாலும் இந்திய முன்னாள் அணு விஞ்ஞானியும் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் மற்றும் பல விஞ்ஞானிகள் இந்த 'சந்திராயன் 1' விண்கலத் திட்டம் வெற்றியளித்துள்ளதகக் கூறியுள்ளனர். இது அனுப்பப்பட்ட நோக்கத்தில் 90% பூர்த்தியாகியுள்ளதேனவும் அறிவித்துள்ளனர்.

நிலவின் மேற்பரப்பை 'சந்திராயன் 1'விண்கலம் எடுத்தனுப்பிய படங்களிலிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில், அமெரிக்காவினால் அனுப்பப்பட்ட 'அப்பலோ 15' என்ற விண்கலம் நிலவைச் சென்றடைந்ததா என்பதில் இருந்துவந்த சந்தேகம் தற்போது தீர்ந்துள்ளது. 40 ஆண்டுகளுக்குமுன் நிலவில் அந்த விண்கலம் ஏற்படுத்திய கோடுகளைச் 'சந்திராயன் 1' விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

'சந்திராயன் 1' விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த அதி நவீன (ஹைபெர் ஸ்பெக்டல்)கேமரா மூலமாகக் பல்வேறு படங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமே 'அப்பலோ 15' நிலவில் இறங்கிய இடமும், அது நடந்தபோது ஏற்பட்ட அடையாளங்களும் மிகத் தெளிவாகத் தென்படுகின்றதாம்.

அதேபோல் விண்வெளிவீரர்கள் பயணம் செய்த தானியங்கி ரோபோக்கள் சென்ற பாதைகளும் படம்பிடித்து அனுப்பப்பட்டுள்ளன. நிலவின் மேட்பரப்பிலுள்ள கருப்பு நிறத் தூசிகள் உள்ளன. அதில் இந்தப்பாதைகள் தெளிவாகத் தெரிகின்றன.

எனினும் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ரோங் மற்றும் எட்வின் ஆல்ரின் ஆகியோரது கால்த் தடங்கள் மிகவும் மங்கலாகவே தென்படுகின்றன.
கனிய வழங்கள் குறித்து 'சந்திராயன் 1' அனுப்பிய படங்களிலிருந்து நிலவின் மேற்பரப்பில் கால்சியம் இருப்பது தெளிவாகியுள்ளது. குறைந்த அடர்த்தி மற்றும் இரும்புப் பற்றாக்குறை காரணமாக அவை மிதக்கின்றனவாம்.

நிலவில் இன்னும் எத்தனை எத்தனை மர்மங்கள் உள்ளனவோ?