Friday, July 25, 2008

புகையிலையில் இருந்து புற்றுநோய்க்கு நிவாரணி

புற்றுநோய்க்கு காரணமாக இருக்கின்ற புகையிலையில் இருந்து கூட குறிப்பிட்ட வகை புற்றுநோய் ஒன்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர்.

புகையிலையில் கண்டறியப்பட்டுள்ள குறிப்பிட்ட ஒரு வகை இரசாயனத்தைக் கொண்டு குருதிப் புற்றுநோய் வடிவம் ஒன்றுக்கு (follicular B-cell lymphoma) (இது Non-Hodgkin lymphoma வகைகளில் ஒன்று) எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தோற்றுவிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர்.

எனினும் இந்த ஆய்வு இப்போ ஆரம்பப் படிநிலையிலேயே இருக்கின்றது. மேலும் பல நிலை ஆய்வுகள் இது தொடர்பில் தொடரப்பட வேண்டி இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஆண்களை அதிகம் தாக்கும் புரஸ்ரேட் புற்றுநோய்க்கு (Prostate cancer ) எதிராக Abiraterone எனும் மருந்தை பாவனைக்கு அனுமதிப்பது குறித்து இறுதிக் கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருந்து குறிப்பிட்ட புற்றுநோயை உருவாக்கத் தூண்டும் ஓமோனை நிரோதித்து புற்றுநோய்த் தாக்கத்தை தடுக்க உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மாத்திரை வடிவில் மருத்துவ சந்தையில் கிடைக்க இருக்கிறது.!

No comments: